சனி, 2024-04-20, 2:22 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

Blog

முகப்பு » 2012 » September » 12 » ஆய்வை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி!
4:03 PM
ஆய்வை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி!
கி.பார்த்திபராஜா - 22 JULY, 2011
Tamil scholar Karthigesu Sivathamby researches comes to an end - Tamil Literature Ilakkiyam Papers

மாமேதை கார்ல் மார்க்ஸ் இறந்தபோது, அவருடைய நண்பர் பிரடெரிக் எங்கெல்ஸ் "மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்" என்றாராம். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இறந்தபோது, "பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்" என்று எழுதினார் கலைஞர். "தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி" - இப்படித்தான் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி மரணத்தைக் குறிப்பிட வேண்டும்.

தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றித் தொடர்ந்து ஆய்வுச் செயல்பாட்டில் இருந்தவர் கா.சிவத்தம்பி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சிவத்தம்பி, தமிழின ஆய்வுப் பரப்பைத் தனது நூல்களின் மூலம் விரிவாக்கியவர்.

2000ஆம் ஆண்டில் தமிழக அரசு சிவத்தம்பிக்கு திரு.வி.க. விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய தமது உரையில், "சுவாமி விபுலானந்தா, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, கணபதிப்பிள்ளை, எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்" என்று  தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான் அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

1932ஆம் ஆண்டு மே திங்கள் 10ஆம் நாள் டி.பி.கார்த்திகேசு, வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிவத்தம்பி. பள்ளிப்படிப்பைத் தனது சொந்த ஊரான கரவெட்டியிலும் புகுமுக வகுப்பைக் கொழும்பு ஜாகிரா கல்லூரியிலும் பயின்றார். இளநிலைப் பட்டத்தை சிலோன் பல்கலைக் கழகத்தில் 1956இலும், முதுகலைப் பட்டத்தை அதே பல்கலைக்கழகத்தில் 1963இலும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வினை பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வாளர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என்ற தலைப்பில் நிறைவு செய்தார்.

இலங்கையில் வித்யோதயா பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய தமிழகப் பல்கலைக்கழகங்களில் விருந்துநிலைப் பேராசிரியாராகப் பணிசெய்தார். மலேயா, பின்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். கா.சிவத்தம்பி தமிழியல் ஆய்வு உலகில், சிறப்பாக, தமிழர்களின் இலக்கிய வரலாற்றுத் துறையில் சிறந்து விளங்கினார். அவருடைய "தமிழில் இலக்கிய வரலாறு" குறிப்பிடத்தக்க ஆய்வு நூல். இலக்கிய வரலாற்றை அதன் தோற்றம், வகைமை, அரசியல் பின்புலத்துடன் ஆராயும் நூல் அது. இலக்கிய விமர்சனத்துறையிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். சிறுகதை, நாவல், கவிதை என அவர் இத்துறையில் விரிவாகச் செயல்பட்டார். காலனியக் காலம் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தின் வரலாறெழுதியலில் கா.சிவத்தம்பி மிக முக்கியமான பங்காற்றினார். தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி, திராவிடக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, யாழ்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் என்பன போன்ற பல நூல்களை எழுதினார்.

தமிழர்களின் பண்பாடு மற்றும் ஊடகச் செயல்பாடுகள் குறித்தும் மிக ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் அவர். நாவலும் வாழ்க்கையும், இலக்கணமும் சமூக உறவுகளும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு, யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும், யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், தமிழ்ப் பண்பாட்டில் கிறித்தவம், தமிழ்ச் சமூகமும் அதன் பண்பாட்டு மீள் கண்டுபிடிப்பும் ஆகியன அவரது மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வு நூல்கள்.

மேற்குறித்த ஆய்வுத் துறை மட்டுமல்லாது தொடக்கம் முதலே நாடக ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

தமிழியல் ஆய்வில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இரட்டையர்கள் என அறியப்பட்டார்கள். இருவரும் ஜார்ஜ் தாம்சனின் மாணவர்கள். அவருடைய வழிகாட்டுதலில் கைலாசபதி, தமிழ்ச் சங்க இலக்கியத்தையும், கிரேக்க வீர யுகப் பாடல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். சிவத்தம்பி, சங்க நாடகத்தையும், கிரேக்க நாடக மரபையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். தான் ஜார்ஜ் தாம்சனிடம் மாணவனாகப் பயின்றமையைத் தன் வாழ்நாளின் இறுதிவரை பெருமையுடன் குறிப்பிட்டு வந்தார்.

இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் தொன்மை மொழியாக, ஐரோப்பியர்களால் அடையாளங்காணப்பட்ட வடமொழிக்கு மாற்றாகத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்தியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியுமே ஆவர். தமிழ் நூல்களின் எண்ணிக்கைக்கு இணையாக சிவத்தம்பி ஆங்கிலத்திலும் நூல்களை எழுதினார். கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், தமிழ் எனப் பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்கினார் சிவத்தம்பி. எனவே உலக அரங்கில், தெற்காசிய அரங்கில் இந்திய அளவில் தமிழின் இடத்தை வற்புறுத்துவதில் அதனை நிலை நிறுத்துவதில் சிவத்தம்பி அறிவார்ந்த நிலையில் தங்குதடையின்றி வாதிக்க முடிந்தது. இலக்கியவியலைச் சமூகவியல், வரலாற்றியல், தொல்லியல், அறிவியல் எனப் பல்துறையோடு ஊடாட வைத்துப் புதிய ஆய்வு முறைமையையும் முற்றிலும் புதிய ஆய்வு முடிவுகளையும் உருவாக்கிக் காட்டியவர் சிவத்தம்பி.

சிறுகதை, நாவல் என்று நவீன இலக்கியத்திலும் பத்துப்பாட்டின் கவிதையியல், பண்டைச் சமூகவியல் என்று மரபிலக்கியத்திலுமாகத் தமிழின் விரிந்த பரப்பின் மீது சற்றும் அயராது பயணப்பட்டவர் அவர்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் கருத்துநிலைப் போராளியாக அடையாளங் காணப்பட்டவர் சிவத்தம்பி. விடுதலைப் போராட்டத்தில் தலைமையிடம் வகித்த பலர் பேராசிரியரின் மாணவர்கள். எனவே சிவத்தம்பியின் கருத்துக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தனர். தங்களின் கருத்துநிலை, அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேராசிரியர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள் போராளித் தலைவர்கள். விடுதலை இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்துத் தயக்கமின்றி விமர்சனங்களையும் வெளியிட்டவர் சிவத்தம்பி.

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கான சிங்கள அறிவுத்துறையினரின் ஆதரவைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார் அவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவு, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் தமிழின அழித்தொழிப்பு பேராசிரியரிடம் மிகப்பெரிய மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தியிருந்ததாகப் பிந்தைய நாட்களில் அவரைச் சந்தித்தவர்கள் சொன்னார்கள்.

இளம் எழுத்தாளர்களின் நவீனப் படைப்புகளையும் தொடர்ந்து வாசிக்கும் மாபெரும் படிப்பாளியாகவே அவர் எப்போதுமிருந்தார். தமிழகத்தின் இளம் ஆய்வாளர்களையும் அவர் தொடர்ந்து கவனித்தபடியே இருந்தார். தமிழகத்துக்கு வந்து கொழும்பு புறப்படும் பொழுதெல்லாம், ஏராளமான புத்தகச் சுமையுடனேயே பயணப்பட்டார்.

மரபிசை, தமிழிசை ஆகியனவற்றின் மீது தீராக் காதல் அவருக்கு எப்போதும் இருந்தது. காருக்குறிச்சி அருணாச்சலமும், டி.என்.இராஜரத்தினம் பிள்ளையும் தங்கள் நாதசுரத்தால் அவருடைய இயத்தை வருடியபடியே இருந்தார்கள். நடப்பதற்குச் சிரமமிருந்த போதிலும், தனது பருத்த தேகத்தைச் சுமந்தபடி மூச்சிரைக்க சென்னை இசையரங்குகளின் படிக்கட்டில் குழந்தையின் குதூகலத்துடன் கடந்து சென்றார். உணவாக இருந்தாலும், இசையாக இருந்தாலும் நூறு சதவிகிதக் கொண்டாட்டத்துடன் இரசிப்பவராக அவர் இருந்தார்.

தன்னையும் கைலாசபதியையும் தமிழக ஆய்வுப் புலத்தில் நிலைநிறுத்தியவர்கள் முற்போக்கு இலக்கியவாதிகளே என்பதைப் பல இடங்களில் கா.சிவத்தம்பி பதிவு செய்திருக்கிறார். "நான் அடிப்படையில் ஒரு இயங்கியல்வாதி. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என் தள நோக்காக அமைவது. 'மாற்றம்' இந்நோக்கு முறைமையில் அச்சாணியாக இடம்பெறும். நான் இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ள முனைகின்றேன். அவற்றைப் பொது உலக நோக்குக்குள் அமைத்துக் கொள்ள விரும்புகின்றேன்" என்று தனது கலை இலக்கிய அரசியல் செயல்பாட்டை வெளிப்படப் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். ஒரு மார்க்சிய அறிஞராக, ஆய்வாளராக, மாற்றங்களை முன்மொழியும் ஒருவராகத் தமிழ் ஆய்வுலகு அவரை நினைவில் ஏந்தும்.

முற்போக்கு முகாமில் மட்டுமல்ல, தமிழியல் ஆய்வுப் புலத்தில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு, பாரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. இவ்வெற்றிடத்தை இட்டு நிரப்புவது எளிய பணி அன்று.


நன்றி: கருஞ்சட்டைத் தமிழர்

பார்வைகள்: 380 | Added by: magickousi | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்